×

மக்கள் பிரச்னைக்காக போராடுங்கள் காங்கிரசாருக்கு சோனியா உத்தரவு

புதுடெல்லி: ‘‘மக்கள் பிரச்னைகளுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் போராட வேண்டும்,’’ என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மூத்த தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பீகார் சட்டப்பேரவை தேர்தல், மத்திய பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடக்கும் இடைத்தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மக்களின் பிரச்னைகளுக்காக போராட்டங்களை நடத்தும்படி, காங்கிரஸ் தலைவர்களை சோனியா கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டின் ஜனநாயகம் மிகவும் கடினமான காலங்களை கடந்து வருவதால் மக்களின் துன்பங்களை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்,’ என கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்கள், உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராசில் தாழ்த்தப்பட்ட இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது, சட்டம் ஒழுங்கு நிலைமை, பொருளாதார சரிவு மற்றும் அதனை மத்திய அரசு கையாளும் விதம் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சனங்களை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Sonia ,Congress , Sonia instructs Congress to fight for people's cause
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...