டெல்லி: நியூசிலாந்து பொதுத்தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான லேபர் கட்சி மீண்டும் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் 19-ம் தேதி நியூசிலாந்தின் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. நியூசிலாந்தின் சில பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அக்டோபர் மாதம் 17ம் தேதி பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். இதன்படி, நேற்று அக்டோபர் மாதம் 17ம் தேதி நியூசிலாந்து பொதுத்தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து, முடிவுகள் வெளியிடப்பட்டது.
அதில், நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளைப் பெற்றது. மேலும், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே, நியூசிலாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றி பெற்றதற்கு பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள், தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெசிந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில், நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு வருடத்திற்கு முன்னர் பிரதமர் மோடி- நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா இருவரும் கடைசியாக சந்தித்ததை நினைவு கூர்ந்து, இந்தியா-நியூசிலாந்து உறவை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒன்றிணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.