வேலூர்: வேலூர் கலெக்டரின் பெயரில் போலி இமெயில் முகவரி தயாரித்து அதன் மூலம் அதிகாரிகளுக்கு நன்கொடை வழங்க கேட்டது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் பெயரில் போலி இமெயில் முகவரி ஏற்படுத்தி அதன்மூலம் அனைத்து துறை அதிகாரிகள், பிரமுகர்களுக்கு தகவல் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் உங்களிடம் இருந்து ‘ஏதாவது’ செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவர் சத்துவாச்சாரி போலீசில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். சத்துவாச்சாரி போலீசார், கலெக்டரின் போலி இமெயில் முகவரி தயாரித்து அதிகாரிகள், பிரமுகர்களிடம் பணம் பறிக்க முயன்ற ஆசாமி தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே நீலகிரி மாவட்ட கலெக்டரின் பெயரில் இதேபோன்று போலி இமெயில் முகவரி தயாரித்து பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று வேலூர் மாவட்ட கலெக்டரின் பெயரில் 2வது சம்பவம் நடந்துள்ளது அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.