திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரமோற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, சில வாரங்களுக்கு முன்பு வருடாந்திர பிரமோற்சவம் நடந்தது. இந்நிலையில், 2வது நவராத்திரி பிரமோற்சவம் நேற்று இரவு தொடங்கியது. இது, 24ம் தேதி வரை நடக்கிறது. பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை தேவி, பூதேவி மலையப்ப சுவாமியின் தங்க திருச்சு உற்சவம் நடைபெற்றது. நேற்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்னவாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். 24ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.