புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தலையும் மீறி, பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்காக 12 பேரணிகளில் பிரதமர் மோடி நேரடியாக கலந்து கொள்கிறார். கொரோனா நோய் தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு இடையே, பீகார் சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையில், பாஜ உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ள மெகா கூட்டணியும் மோதுகின்றன.
இதில், மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக நிதிஷ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பலம் சேர்க்கும் வகையில், கொரோனா அச்சுறுத்தலையும் மீறி, பிரதமர் மோடியும் வரும் 23ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரையில், மொத்தம் 12 பிரசார பேரணிகளில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். இந்த பிரசாரத்தில் மோடியின் பேச்சை பீகாரின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்வதற்கு, சமூக வலைதளங்களை முழு வீச்சில் பயன்படுத்த, பாஜ திட்டமிட்டுள்ளது.
மோடியின் பேரணி விவரம்
மாதம் தேதி இடங்கள்
அக். 23 சசராம், கயா, பாகல்பூர்
அக். 28 தர்பாங்கா, முசாபர்பூர், பாட்னா
நவ. 1 சஹப்ரா, கிழக்கு சம்பரான், சமஸ்திபூர்
நவ. 3 மேற்கு சம்பரான், சகர்ஷா, அராரியா