பனாஜி: கோவா மாநில மலைப் பிரதேசங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் ஆன்லைன் வகுப்புக்களுக்காக மாணவர்கள் தினமும் 3 கிமீ மலையேற்றம் செய்து, மலை உச்சிக்கு செல்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் முதல் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில், தற்போது கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புக்களை நடத்தி வருகின்றன. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்கு ஸ்மார்ட் போனும், இன்டர்நெட் சேவையும் அவசியம். இன்டர்நெட் சேவை கிடைத்தால்தான், அவர்களால் ஆன்லைன் வகுப்புக்களை தடங்கலின்றி தொடர முடியும்.
ஆனால், கோவா மாநிலம், பனாஜியில் இருந்து 100 கிமீ தூரத்தில் அமைந்துள்ள குமாரி, பாட்ரே என்ற மலைக் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், செல்போன் சிக்னல் கிடைக்காததால், தினமும் 3 கிமீ தூரம் மலையேற்றம் செய்து மலை உச்சிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அங்குதான், செல்போன் சிக்னல் கிடைக்கிறது. இதற்காக 25 மாணவ, மாணவிகள் தினமும் மலை உச்சிக்கு செல்கின்றனர். நகர்ப்புற மாணவர்கள் சொகுசு மெத்தைகளில் படுத்துக் கொண்டு, ஆன்லைன் படிப்புகளை அரைகுறையாக படிக்கும் நிலையில், இதுபோல் படிப்புக்காக கஷ்டப்படும் பிள்ளைகளும் நாட்டில் இருக்கவே செய்கின்றனர்.