புழல்: திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் முன்பு நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்பத்தூர் எஸ்.மகேந்திரன் தலைமை வகித்தார். செங்குன்றம் நகர தலைவர் எஸ்.கோபி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் பிரிவு இணைத் தலைவர் வழக்கறிஞர் அருணாச்சலம், மாவட்ட பொதுச்செயலாளர் சாந்தகுமார் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் விவசாயிகள் சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரி கையெழுத்து பெற்றனர். முன்னதாக, இவர்கள் அண்ணா பேருந்து நிலையம் முன் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், டிராக்டரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.