சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் பலர் போட்டியிட்டனர். இதில், ரவீந்திரநாத் வெற்றி் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தேனி நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ரவீந்திரநாத்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்யக்கோரிய ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.