சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு 500, 100 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த அதே பகுதியை சேர்ந்த அப்துல்காதர் (43), மாதவரத்தை சேர்ந்த பால்பிரபாகர் (50), அண்ணாநகரை சேர்ந்த பார்த்தசாரதி (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9.50 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் மற்றும் பிரின்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை சென்னை 2வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சமீனா முன்னிலையில் நடந்தது.
அரசு தரப்பில் வக்கீல் வி.எஸ்.நாராயணராவ் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, அப்துல்காதர் உள்பட 3 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், 35 ஆயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார்.