×

நடத்தை சந்தேகத்தால் ஆத்திரம் மனைவி மீது வைத்த தீயில் கருகி பக்கத்து வீட்டு சிறுமி பரிதாப பலி: கணவர் மீது கொலை வழக்கு பதிந்து விசாரணை

ஆத்தூர்: தலைவாசல் அருகே நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், மனைவி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்ததில், பக்கத்து வீட்டு சிறுமி உடல் கருகி உயிரிழந்தாள். இதையடுத்து, கணவன் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள ஆறகளூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து (42). இவரது மனைவி தெய்வானை (35). தெய்வானைக்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் (35) என்பவருடன் தகாத உறவு உள்ளதாக மருதமுத்து சந்தேகமடைந்தார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாலை அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த மருதமுத்து, தெய்வானையின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றினார். பின்னர் அவர் மீது தீ வைக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த தெய்வானை உயிர் தப்பிப்பதற்காக மணிகண்டன் வீட்டிற்குள் ஓடினார். இதனை கண்டு அங்கிருந்த மணிகண்டன் மனைவி திவ்யா (27) மற்றும் அவரது 3 வயது மகள் தனுஸ்ரீ ஆகியோர் திடுக்கிட்டனர். ஆனால், மருதமுத்து உள்ளே புகுந்து தெய்வானையின் மீது தீ வைத்ததில் அருகே இருந்த திவ்யா, தனுஸ்ரீ மீதும் தீப்பற்றிக் கொண்டது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், 3 பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தலைவாசல் போலீசார் தப்பியோட முயன்ற மருதமுத்துவை கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனுஸ்ரீ (3) நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். இதையடுத்து, மருதமுத்து மீதான கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : death , Suspicion of misconduct, wife, charred in fire, girl, tragically killed
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...