மதுரை: கொரோனாவுக்கான சித்த மருந்தை அங்கீகரிக்கக் கோரிய வழக்கில், ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்காததால் தான் நோபல் பரிசு பெற முடியவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொரோனாவை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற சித்த மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இதை, நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு பரிந்துரைத்துள்ள இம்ப்ரோ மருந்தை மத்திய சுகாதாரத்துறை செயலர், மத்திய சித்தா மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் உடனடியாக பரிசோதித்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஒரு ஆராய்ச்சியாளரை ஊக்குவிக்கும் முறை இது தானா? தமிழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர்களை முழுமையாக ஊக்குவிப்பதில்லை. இதனால் தான் இந்தியர்களால் மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெற முடியவில்லை. ஆராய்ச்சியாளர்களை முறையாக உருவாக்காதது துரதிருஷ்டமானது. இதில் அரசியல் வேறு’’ என்றனர். மேலும், மனுதாரர் தரப்பு ஆய்வறிக்கையையும், மத்திய அரசு தரப்பு அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.