×

நடத்தை சந்தேகத்தால் ஆத்திரம் மனைவி மீது வைத்த தீயில் பக்கத்து வீட்டு சிறுமி பலி: கணவர் மீது கொலை வழக்கு

ஆத்தூர்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரை சேர்ந்தவர் மருதமுத்து (42). இவர், தனது மனைவி தெய்வானைக்கு (35) பக்கத்து வீட்டுக்காரரான மணிகண்டனுடன் (35) தகாத உறவு உள்ளதாக சந்தேகம் அடைந்தார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாலை அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மருதமுத்து, தெய்வானையின் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த தெய்வானை உயிர் தப்பிப்பதற்காக மணிகண்டன் வீட்டிற்குள் ஓடினார். இதனை கண்டு அங்கிருந்த மணிகண்டன் மனைவி திவ்யா (27) மற்றும் அவரது 3 வயது மகள் தனுஸ்ரீ ஆகியோர் அலறினர்.

அங்கும் நுழைந்த மருதமுத்து தெய்வானையின் மீது தீ வைத்ததில் அருகே இருந்த திவ்யா, தனுஸ்ரீ மீதும் தீப்பற்றிக் கொண்டது. அக்கம் பக்கத்தினர் வந்து 3 பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இது குறித்து தலைவாசல் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து மருதமுத்துவை கைது செய்தனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் தனுஸ்ரீ (3) நேற்று காலை இறந்தாள். இதையடுத்து, மருதமுத்து மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Tags : Husband killed in fire over wife
× RELATED சிங்கப்பூரில் இருந்து வந்த விமான...