திருப்புத்தூர்: 219வது குருபூஜையையொட்டி திருப்புத்தூரில் மருதுபாண்டியர் அரசு நினைவு மண்டபத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.இந்திய நாட்டின் விடுதலைக்கு வெள்ளையரை எதிர்த்து முதல் போர் பிரகடனம் செய்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் 1801ம் ஆண்டு திருப்புத்தூரில் தூக்கிலிட்ப்பட்டனர். இவர்களுடன் 500க்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டனர். இதன் 219ம் ஆண்டு நினைவு நாள் வரும் அக்.24ம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி திருப்புத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் அரசு நினைவு மண்டபத்திலும், திருப்புத்தூர் பழைய பஸ்ஸ்டாண்ட் எதிரே தூக்கிலிடப்பட்ட இடமான நினைவு ஸ்தூபியிலும் அரசு சார்பில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதற்காக நினைவு மண் டபம் சீரமைக்கப்பட்டு சுத்தம் செய்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. மேலும் மருதுபாண்டியர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த லிங்கம் மண்டபத்தின் அருகே இடது பக்கமாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த லிங்கத்தை மண்டபத்தின் வலது பக்கத்தில் சிறிய அளவில் கோயிலாக கட்டி அதில் வைக்க வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.