×

துரிஞ்சாபுரம் அடுத்த தனகோட்டிபுரத்தில் 11 லட்சத்தில் அண்ணாமலையார் கோயில் ஏரி தூர்வாரும் பணி தீவிரம்: தன்னார்வலர்கள் ஏற்பாடு

கலசபாக்கம்:  துரிஞ்சாபுரம் அடுத்த தனகோட்டிபுரத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான ஏரியில் 11  லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.துரிஞ்சாபுரம் ஒன்றியம், தனகோட்டிபுரம் கிராமத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான  147 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு சாகுபடி செய்யும் நெல், அண்ணாமலையார் கோயிலில் அன்னதானம் செய்வதற்கு  பயன்படுத்தப்படுகிறது. மேலும், இங்கு 38 ஏக்கர் பரப்பளவிற்கு ஏரியும் அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில்  இருந்ததால், மழைக்காலங்களில் ஏரி நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. எனவே, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு,  கரையை பலப்படுத்துவதற்கு 11 லட்சம் செலவாகும் என திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

சென்னையை சேர்ந்த ஏ.கே.மணி, கோவையை சேர்ந்த நாகராஜ் ஆகியோர், இதனை ஏற்றுக்கொள்வதாக அண்ணாமலையார் கோயில்  இணை ஆணையாளர் ஞானசேகரனிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கோயில் நிர்வாகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு, கடந்த  5ம் தேதி முதல் தனகோட்டிபுரம் ஏரி தூர்வாரும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.ரதசப்தமி விழாவின்போது, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு கலசபாக்கத்தில் தீர்த்தவாரி நடப்பது  வழக்கம். அப்போது, தனகோட்டிபுரத்தில் உள்ள நிலத்தை அண்ணாமலையார் கிரிவலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது, தூர்வாரும் பணிகள் நடப்பதால் மழைக்காலத்தில் ஏரி நிரம்ப வாய்ப்புள்ளது. இதன் மூலம் 147 ஏக்கர் பரப்பளவிற்கு  விவசாய பணிகள் நடக்கும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Tags : Annamalaiyar Temple Lake ,Thanakottipuram ,volunteers ,Trincomalee , Annamalaiyar at 11 lakhs at Thanakottipuram next to Trincomalee Temple Lake Dredging Intensity: Organized by Volunteers
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு