சென்னை : தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக அரசு ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை, கரும்பு, பொங்கல் தொகுப்பு பொருட்களுடன், ஆயிரம் ரொக்கப் பரிசையும் அளித்து வருகிறது. இந்நிலையில். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் மாதக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளதால், தீபாவளி பண்டிகையை அவர்கள் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு இந்த ரொக்கப் பரிசை வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 1,000 ரூபாய் நிவாரணத் தொகையாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஏப்ரலில் ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை ரேஷ்ன் அட்டை தாரர்களுக்கு தமிழக அரசு வழங்கியது. அதன்பின் ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்குவதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாதந்தோறும் அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் எழுந்துள்ளது.அத்துடன், கொரோனாவை காரணங்காட்டி பொங்கல் பண்டிக்கைக்கும் 1,000 ரூபாய் பதிலாக கூடுதல் தொகை அளிப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.