சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75 ஆகும். தற்போது 54 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 21 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு மதியம் 3 மணியளவில் பிரிவு உபசார விழா நடந்தது. இதில் தலைமை நீதிபதி உள்ளிட்ட குறிப்பிட்ட நீதிபதிகள் கலந்துகொண்டனர். பிரிவு உபசார நிகழ்ச்சியை வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பார்த்தனர்.
நீதிபதி ரவிச்சந்திரபாபு விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர். சென்னை சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்து 1984ல் வக்கீலாக பதிவு செய்தார். மூத்த வக்கீல் ஆர்.காந்தியிடம் ஜூனியராக சேர்ந்த இவர், மத்திய அரசு வக்கீலாக பணியாற்றியுள்ளார். கடந்த 2011ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். நீதிபதி ரவிச்சந்திரபாபு ஓய்வு பெற்றதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக குறைந்துள்ளது.