×

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: கணவன் மனைவி தகராறை இடைமறித்தபோது விபரீதம் l 2 பேர் கைது

சென்னை: பணிப் பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் எற்பட்ட தகராறை இடைமறித்த போது, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான கே.கே.நகர் தனசேகரனுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த தனசேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன்(56). திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் அமுதா(34) என்ற பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

அமுதாவுக்கு பொன்வேல்(38) என்ற கணவர் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அமுதா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் குடும்ப தகராறு குறித்து பல முறை கே.கே.நகர் தனசேகரன் நேரில் அழைத்து பேசியுள்ளார். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. இதனால் பொன்வேல் தனது மனைவியை கொலை செய்யும் நோக்கில் பல முறை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அமுதா நேற்று வழக்கம் போல் கே.கே.நகர் தனசேகரன் அலுவலகத்துக்கு பணிக்கு வந்தார். நேற்று மதியம் 12 மணிக்கு விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் 138 வது வட்ட திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.

அதில் கே.கே.நகர் தனசேகர் கலந்து கொண்டார். பிறகு வீட்டிற்கு வந்த அவர் சிறிது நேரம் அலுவலகத்தில் இருந்தார். பின்னர் மதியம் உணவு இடைவேளையின் போது, தனசேகர் தனது அலுவலகத்தின் மேலே உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அமுதா அலறும் சத்தம் கேட்டு தனசேகர் வீட்டில்  இருந்து அலுவலகத்துக்கு ஓடிவந்தார். அப்போது அமுதாவை அவரது கணவர் பொன்வேல் அரிவாளால் வெட்டுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அரிவாளால் அமுதாவை வெட்டுவதை தடுக்க தனசேகரன் முயன்றார். அப்போது பொன்வேல் தனது மனைவியை வெட்டுவதை இடைமறித்த தனசேகரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தில் தனசேகருக்கு தலையில் பலமான அரிவாள் வெட்டு விழுந்தது. அதைபோல் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அமுதாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தனசேகரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அமுதா இஎஸ்ஐ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கே.ேக.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் மணிகண்டன், பொன்வேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பொன்வேலுடன் யார் யார் வந்தனர் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கே.கே.நகர் தனசேகருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் அருகே ஒன்று கூடியதால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.


Tags : KK Nagar Dhanasekaran ,DMK , DMK executive committee member KK Nagar Dhanasekaran slashed by a barrage of scythes
× RELATED ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள்,...