காஞ்சிபுரம்: உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் நினைவுத்தூண் அருகில் சத்யா கிரக அறவழி போராட்டம் நடந்தது. முன்னாள் எம்பியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான விஸ்வநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்எல்.என்.எஸ்.விஜயகுமார், முன்னாள் நகர தலைவர் ஆர்.வி.குப்பன் ஆகியோர் வரவேற்றனர். காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அச்சிறுப்பாக்கம் தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் ஜோஷி, நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் முன்னாள் எம்பி விஸ்வநாதன் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜ அரசு, கடந்த 6 ஆண்டுகளாக மக்களுக்கு எதிராக ஜனநாயக படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது. உத்தரபிரதேசத்தில் இளம்பெண்ணை பலாத்தாரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தியை தாக்கி தரக்குறைவாக நடத்திய உத்தரபிரதேச அரசு பதவி விலக வேண்டும்.
சிறுமிகள், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் 6 மாதத்தில் தண்டனை வழங்கப்படும் என அறிவித்த பாஜ அரசு, சொன்னதை செய்யாமல் நடிகைகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது. இந்த அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்றார்.