சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொறியியல் கல்லூரி மாணவி கொரோனா ஊரடங்கு விடுமுறையில் பழைய காலி பாட்டிகளில் அழகிய ஓவியங்களை வரைந்தும், கலைப்பொருட்களை உருவாக்கியும் கவனம் ஈர்த்து வருகிறார். காரைக்குடி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த தம்பதி உலகப்பன், கண்ணம்மாள். உலகப்பன் திருப்புவனத்தில் உதவி மின் செயற்பொறியாளராக உள்ளார். இவரது மகள் கீர்த்திகா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயதிலேயே ஓவியம் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர்; பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததும் ஓவியம் வரைவதை கைவிட்டார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் வீட்டிற்கு சென்ற கீர்த்திகா ஓவியம் வரையத் தொடங்கினார். காகிதங்களில் வரைந்து வந்த அவர் மாறுதலுக்காக காலி பாட்டில்களில் ஓவியங்களை வரைந்தார். அந்த ஓவியங்கள் பார்ப்பதற்கு அழகாகவும் தத்ரூபமாகவும் இருந்ததால் அவரது பெற்றோரும் பாட்டிலில் ஓவியம் வரைவதை ஊக்குவித்தனர். அதற்காக காலி பாட்டில்களை சேகரித்து கொடுத்தனர். மேலும் கீர்த்திகாக வீணாக தூக்கி எறியும் அட்டைகள், வளையல்கள் போன்ற மற்ற பொருட்களிலும் பல்வேறு கலைப்பொருட்களை உருவாக்கி அசத்தி வருகிறார்.