திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் நான்கு மாட வீதி உலா வருவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு சுவாமி வீதி உலா நடைபெறும் என அக்டோபர் 1-ம் தேதி தேவஸ்தானம் அறிவித்தது.
ஆனால் மத்திய அரசு வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறையில் மத வழிபாட்டு நிகழ்வுகளின் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளது. இதனால் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ போன்று கோவிலுக்குள் கல்யாண உற்சவம் மண்டபத்தில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி தெரிவித்துள்ளார். இதன்படி, பிரம்மோற்சவம் நான்கு மாட வீதி உலா வருவது ரத்து செய்யப்பட்டுள்ளது.