காந்திநகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 5 வயது மகளுக்கு மிரட்டல் விடுத்த 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக செயல்பட்டதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் தோனியின் மகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பலாத்கார மிரட்டல் விடுக்கப்பட்டது. தோனியின் மனைவி சாக்சியின் இன்ஸ்டாகிராமிக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இது சமூக ஊடகங்களில் வைரலானது.
கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இந்நிலையில் இது தொடர்பாக குஜராத்தின் முந்தராவில் உள்ள நம்னா கபாயா பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் தோனியின் மகளுக்கு பாலியல் பலாத்கார அச்சுறுத்தல் விடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.