புதுடெல்லி: மறைந்த பாஜ தலைவரான விஜயராஜே சிந்தியா நினைவாக ரூ.100 சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். மறைந்த பாஜ தலைவரான விஜயராஜே சிந்தியா பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனைதொடர்ந்து நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, விஜயராஜே சிந்தியாவை நினைவு கூர்ந்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘‘சிந்தியா குவாலியரில் அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். ஜனசங்கத்தின் உறுப்பினராகவும், பாஜவின் உறுப்பினராகவும் இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
அவர் உறுதியான தலைவர் மற்றும் திறமையான நிர்வாகியாவர். அவர் ஒரு போதும் பதவி மற்றும் அதிகாரத்துக்காக வாழவில்லை. வாஜ்பாய், எல்கே அத்வானி ஆகியோரிடம் இருந்து ஜனசங்கதலைவர் வாய்ப்பை நிராகரித்தவர். வலுவான மற்றும் பாதுகாப்பான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவது தான் அவரது கனவாகும். ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் மூலமாக அது நிறைவேறுகிறது” என்றார். தொடர்ந்து விஜயராஜே சிந்தியா நினைவாக ரூ.100 சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.