திருமலை: நிஜாமாபாத் எம்எல்சி இடைத்தேர்தலில் தெலங்கானா முதல்வரின் மகள் வெற்றி பெற்றார். இதில், காங்கிரஸ் பாஜ வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் எம்எல்சி இடைத்தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியானது. இதில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் வேட்பாளரும், முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கல்வகுண்ட்லா கவிதா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுபாஷ் மற்றும் பாஜ வேட்பாளர் போத்தங்கர் லக்ஷ்மிநாராயணா ஆகிய 2 பேரும் டெபாசிட் இழந்தனர். மொத்தம் பதிவான 823 வாக்குகளில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 728 வாக்குகளையும், பாஜ 56 வாக்குகளையும், காங்கிரஸ் 29 வாக்குகளையும் பெற்றது. இதில், செல்லாத 10 ஓட்டுகள் இருந்தது. இதையடுத்து, டிஆர்எஸ் கட்சி வேட்பாளர் கவிதாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. அவர் வருகின்ற 14ம் தேதி எம்எல்சியாக பதவியேற்க உள்ளார்.