×

சொந்த பாஸ்போர்ட்டில் ரகசியமாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் 14முறை வெளிநாடு பயணம்: 6 முறை சொப்னாவும் உடன் சென்றது அம்பலம்

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் 14 முறை சொந்த பாஸ்போர்டை பயன்படுத்தி ரகசியமாக வெளிநாடுகளுக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. அவருடன் 6 முறை சொப்னாவும் சென்று வந்துள்ளார். கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிவசங்கர் தன்னுடைய சொந்த பாஸ்போர்டை பயன்படுத்தி 14 முறை வெளிநாடுகளுக்கு ரகசியமாக சென்று வந்தது அம்பலமாகி இருக்கிறது.

இதில் துபாய்க்குதான் அதிகமுறை சென்று வந்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட மத்திய உயரதிகாரிகள் அலுவல் ரீதியாக வெளிநாடு செல்லும் போது, அவர்களுக்கு சிறப்பு பாஸ்போர்ட் வழங்கப்படும். இதை பயன்படுத்திதான் அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும். இதற்கான போக்குவரத்து, தங்கும் இடம் உள்பட அனைத்து செலவுகளையும் கேரள அரசே ஏற்கும். அலுவல் ரீதியாக செல்வதாக கூறி சிவசங்கர் தனது சொந்த பாஸ்போர்டில் வெளிநாடு சென்று வந்தது ஏன் என்று விசாரணையின் போது அதிகாரிகள் கேள்விகளை கேட்டு துளைத்துள்ளனர். இதற்கான செலவை செய்தவர் யார்? என்றும் கிடுக்கிப்பிடியாக கேட்டு இருக்கின்றனர். சிவசங்கரின் 14 முறை ரகசிய பயணத்தின் போது 6 முறை சொப்னாவும் உடன் சென்று இருக்கிறார்.

இதுதவிர 2 பேரும் சேர்ந்து கூடுதல் பயணங்கள் சென்றார்களா? என்றும் விசாரணை நடந்து வருகிறது. லைப் மிஷன் திட்டம், தங்கம் கடத்தலில் கிடைத்த கமிஷன் தொகையை டாலர்களாக மாற்றி சொப்னா வெளிநாடுகளுக்கு கடத்தியதாக தெரிகிறது. சொப்னா 1.90 லட்சம் டாலர் (ரூ.1.38 கோடி) கடத்தியதை ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதிக கரன்ஸிகளை, சிவசங்கர் துணையோடு கடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். அன்னிய செலாவணி கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறை சொப்னா மீது வழக்குப்பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவசங்கர் மீதும் இந்த வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

* பலரும் இப்படித்தான்!
சிவசங்கர் மட்டுமல்லாமல் மேலும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் அரசு பயணம் என்று கூறி, சொந்த பாஸ்போர்டில் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளது தெரியவந்து இருக்கிறது. இதுகுறித்தும் சுங்க இலாகா, மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அலுவல் ரீதியாக செல்பவர்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டமாக இருந்தும், பலரும் இதை மீறி இருக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு செல்ல பணம் செலவு செய்தது யார்? இப்படி சென்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை, பரிசு பெற்றுள்ளதும் தெரியவந்து இருக்கிறது. இது வெளிநாட்டு நன்கொடை தடுப்பு சட்டத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது.

* பினராய் விஜயனை சந்தித்தது எப்போது?
இதற்கிடையே கடந்த 2017ம் ஆண்டு திருவனந்தபுரம் அமீரக துணைத்தூதர் முதல்வர் பினராய் விஜயனை அவரது வீட்டில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியதாக சொப்னா, சுங்க இலாகாவிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார். ஆனால் எந்த தேதியில் சந்தித்தனர் என்பது நினைவில்லை என்றும் கூறி இருக்கிறார். இதன் உண்மைத்தன்மை குறித்து என்ஐஏ, சுங்க இலாகா, மத்திய அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கி உள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் பார்வையாளர்கள் பதிவேட்டை பரிசோதித்தால் இதுதொடர்பான உண்மை தெரியவரும் என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். ஆகவே அதற்கான முயற்சிகளிலும் விசாரணை அமைப்புகள் இறங்கி உள்ளன.

Tags : IAS ,Sivasankar ,times ,Sopna , Secretly IAS in own passport. Officer Sivasankar traveled abroad 14 times: Sopna went with him 6 times
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு