×

கடம்பூர் மலையில் காட்டாற்று வெள்ளம்: போக்குவரத்து துண்டிப்பு

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் கனமழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மலை கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த மலைகிராமங்களுக்கு சத்தியமங்கலத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் கடம்பூர் மலையில் கன மழை பெய்து வருவதால், வனப்பகுதியில் உள்ள குரும்பூர் பள்ளத்தில் செந்நிற மழை நீர் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

இதன் காரணமாக நேற்று காலை மாக்கம்பாளையம் கிராமத்திற்கு சென்ற அரசு பஸ் காட்டாற்று வெள்ளத்தை கடக்க முடியாமல் திரும்பியதால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.அப்போது வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 10க்கும் மேற்பட்ட மாடுகள் காட்டாற்று வெள்ளத்தை பற்றி கவலைப்படாமல் நீரில் தைரியமாக இறங்கி ஆற்றை சாதுரியமாக கடந்து சென்றன. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மாக்கம்பாளையம், அரிகியம், கோவிலூர், கோம்பை தொட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மலை கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். நேற்று மதியம் 12 மணியளவில் காட்டாற்றில் வெள்ளம் குறைந்ததால், அரசு பஸ் புறப்பட்டு மாக்கம்பாளையம் கிராமத்திற்கு சென்றது.

Tags : floods ,Kadampur Hills , Kadampur, Transport
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி