×

காதலிக்கும்போது எடுத்த புகைப்படத்தை காட்டி பெண் மீது தாக்குதல்: வாலிபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜி(29). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த எல்.எல்.பி., படித்து முடிக்காமல் வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி  வரும் சந்தோஷ் சாம்ராட் என்பவரும் கல்லூரி படிக்கும்போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணம் செய்வதாக கூறி சந்தோஷ் சாம்ராட் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால் விஜி வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, அவர்களது திருமண வாழ்க்கையை கெடுக்கும் வகையில்  காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை  சந்தோஷ் சாம்ராட் விஜியின் கணவருக்கு அனுப்பினார். இதனால் விஜிக்கு விவாகரத்தானது.

இந்நிலையில், காதலித்த விஷயம் முதல் திருமணம் நடந்து விவாகரத்து ஆனது வரை அனைத்து தகவல்களையும் சொல்லி விஜிக்கு 2வது திருமணம் செய்ய அவரது தந்தை ஏற்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தோஷ் சாம்ராட்,  “போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன். ₹2 லட்சம் பணம் கொடுத்தால் வெளியிட மாட்டேன்” என்று விஜியின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த விஜி இதுகுறித்து 2வதாக திருமணம் செய்ய உள்ள  மாப்பிள்ளையிடம் கூறினார். அதற்கு அவர் “இந்த விவகாரத்தை திருமணத்திற்கு முன்பே முடிக்க வேண்டும். இல்லையேல் திருமணம் வேண்டாம்” என்று கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து, விஜி, சந்தோஷ் சாம்ராட்டை கடந்த 5ம் தேதி  சந்தித்து பேச சென்றார். அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜியின் தலைமுடி மற்றும் கையில் சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து  தப்பி தலைமறைவானார். இதுகுறித்து, விஜி செவ்வாப்பேட்டை காவல்  நிலையத்தில் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் சந்தோஷ் சாம்ராட்டை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Attack on a woman by showing her a photo taken while in love: Young man arrested
× RELATED உ.பி.யில் காவலர் தேர்வுக்கான விடைக்...