சென்னை: சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான பூங்காக்கள் உள்ளன. இதில், சூளை ஏபி சாலையில் உள்ள ராகவேந்திரா பூங்காவுக்கு தனிச்சிறப்பு உண்டு. மகாத்மா காந்தி மக்களை அழைத்து இங்கு, உரையாடியதாக வரலாறு கூறுகிறது. 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா முறையான பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதிகள் கூடாரமாக மாறியது. இந்நிலையில், எழும்பூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ₹1.12 கோடி செலவில் அக்குபஞ்சர் நடைபாதை, யோகா மேடை, மூலிகை செடிகள், நவீன நிழற்குடை, பிரமிடு வடிவமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 108 மூலிகை செடிகள் நடப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இங்குள்ள மூலிகை செடிகளால் என்னென்ன பயன் என சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடம், யோகா, குழந்தைகள் விளையாடும் இடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 இறகு பந்தாட்ட மைதானம், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பூங்கா பராமரிப்பு பணிக்கு மாநகராட்சி சார்பில் 4 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பூங்கா வரும் 19ம் தேதி திறக்கப்படுகிறது.
இதுகுறித்து எழும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ராகவேந்திரா பூங்கா தற்போது மூலிகை மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் பெரியோருக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.