பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் இருவேறு நடிகைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் நடிகை சஞ்சனா திருட்டு வழக்கில் கைதான பெண்ணின் அறையிலும், ராகிணி கிரிக்கெட் பெட்டிங்கில் கைதான பெண்ணின் அறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். கன்னட திரையுலகில் போதை பொருள் புழக்கம் தொடர்பாக கன்னட நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஆகியோரை சி.சி.பி போலீசார் கைது செய்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர். இவர்களுடன் போதை பொருள் சப்ளையர்களும் கைதாகி அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதல் 14 நாள் சிறையில் உள்ள கொரோனா குவாரன்டைன் மையத்தில் அடைக்கப்பட்டிருந்த நடிகைகள், சமீபத்தில் சக கைதிகளுக்கான அறையில் அடைத்திருந்தனர். அங்கு சஞ்சனா மற்றும் ராகிணி ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து பழக்கமான அவர்கள், சிறையில் வசதிகள் இல்லை என்றதும் சிறிது மன அழுத்தத்திற்குள்ளாகினர். இதை வெளிப்படுத்த முடியாமல் நடிகைகள் தங்களுக்கு வாக்குவாதம் செய்து கொண்டனர். சிறையில் அடைக்கப்பட்ட சில நாளில் சஞ்சனா சிகரெட் கேட்டு சிறை அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்தார். பின்னர் உணவு சரியில்லை. மருத்துவ வசதிகள் இல்லை என்று 2 நடிகைகளும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இந்த விவகாரத்தை தாண்டி இருவேறு நடிகைகளுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் வேரூன்றி அது குடுமிபிடி சண்டையாக மாறிவிட்டது. ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருப்பது மட்டுமின்றி, இரவு முழுவதும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மோதலால் நிம்மதி இழந்த சிறை பெண் காவலர்கள் உயர் அதிகாரிகளிடம் இருவரையும் தனித்தனியாக அடைக்கும்படி பரிந்துரை செய்தனர்.
அதை ஏற்ற நிர்வாகம் நேற்று சஞ்சனா மற்றும் ராகிணியை வெவ்வேறு அறையில் அடைத்தனர். நடிகைகள் போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு தனி அறை ஒதுக்க சிறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. அதனால் குற்றப்பின்னணி உள்ளவர்களின் அறையில் அடைக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி சஞ்சனா திருட்டு வழக்கில் கைதான பெண் கைதியின் அறையிலும், ராகிணி கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்ட பெண் கைதியின் அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சஞ்சனா ஜாமீன் மனு இன்று விசாரணை
போதை பொருள் வழக்கில் கைதான சஞ்சனா 3 முறை ஜாமீனுக்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனு விசாரணை இன்று ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மீண்டும் அந்த மனு மீதான விசாரணை நடக்கிறது. ஏற்கனவே சி.சி.பி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. சாட்சியங்களை அழிக்க நேரிடும் என்ற அரசு தரப்பில் முறையிடப்பட்டதால் இவருக்கும், ராகிணிக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சஞ்சனாவின் இந்த ஜாமீன் மனுவின் விசாரணையின்போது, இதே குற்றச்சாட்டை முன் வைக்க அரசு மற்றும் சி.சி.பி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரவி சங்கரை காவலில் எடுத்து விசாரணை
போதைபொருள் வழக்கில் கைதான நடிகை ராகிணியின் நண்பரும், ஆர்.டி.ஓ அதிகாரியான ரவி சங்கரிடம் 2018ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரிக்க சி.சி.பி முடிவு செய்துள்ளனர். அதன்படி நீதிமன்றத்தில் ரவி சங்கரை காவலில் எடுக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. நீதிமன்றம் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று சி.சி.பி போலீசார் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவி சங்கரை காவலில் எடுத்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.