தூத்துக்குடி: முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செல்லப்பாண்டியனுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கடந்த சில வாரங்களாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடந்த பொது நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடந்த ஓரிரு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட அவருக்கு மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.