×

கூட்டு பலாத்காரம், கொலை ஹத்ராஸ் பெண் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்தது சிபிஐ

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராசில் தாழ்த்தப்பட்ட 19 வயது இளம்பெண் கடந்த மாதம் 4 பேர் கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகளை கண்டித்து அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த வழக்கு விசாரணையில் உபி.யில் நடந்தால் நியாயம் கிடைக்காது என பல தரப்பினரும் குரல் கொடுத்தனர். இதையடுத்து, வழக்கை சிபிஐ.யிடம் ஒப்படைப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். அதன்படி,  சிபிஐ ஹத்ராஸ் வழக்கை முறைப்படி நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த சம்பவம் தொடர்பாக கூட்டு பலாத்காரம், கொலை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  வழக்கை காஜியாபாத் பிரிவு சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க இருப்பதாகவும், இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : CBI ,gang rape ,Hathras ,murder , The CBI has registered a case in the case of gang rape and murder of a Hathras woman
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...