×

இந்தியாவுக்கு எதிராக வடக்கு லடாக் எல்லையில் சீனா பெருமளவில் படை குவிப்பு: அமெரிக்க அமைச்சர் தகவல்

வாஷிங்டன்: கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சிகளால் இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலியும் நிகழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. லடாக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும், தூதரகரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதைப்போல இருநாட்டு வெளியுறவு துறை மற்றும் ராணுவ மந்திரிகளும் கடந்த மாதம் மாஸ்கோவில் சந்தித்தனர்.

எனினும் அப்பகுதியில் பதற்றத்தை தணிப்பதில் எவ்வித முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை முறியடிக்கும் வகையில் இந்தியாவும் படைகளை குவித்து கண்காணிப்புகளை பலப்படுத்தி உள்ளது. இதனால் தொடர்ந்து லடாக் எல்லையில் பதற்றமான சூழலே நீடித்து வருகிறது. இந்நிலையில் குவாட் நாடுகள் என அறியப்படும் இந்தோ-பசிபிக் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை டோக்கியோவில் சந்தித்து பேசினர். கிழக்கு லடாக், இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் தென்சீனக்கடல் பகுதிகளில் சீனாவின் அத்துமீறல்களுக்கு மத்தியில், இந்த பிராந்தியங்களில் சீனாவின் எழுச்சி குறித்து இந்த நாடுகள் விவாதம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் இந்தியாவின் ஜெய்சங்கர், அமெரிக்காவின் மைக் பாம்பியோ உள்பட 4 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்று தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து உரையாற்றினார். இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பிய மைக் பாம்பியோ, செய்தி நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து பேட்டியளித்தார். அப்போது சீனாவின் அச்சுறுத்தல் தொடர்பானவைகளை விவரித்தார். இது தொடர்பாக மைக் பாம்பியோ கூறுகையில், குவாட் என நாங்கள் அழைக்கும் மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் வலுவான பொருளாதாரம் கொண்ட 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேசினோம்.

இந்த நாடுகள் அனைத்தும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அச்சுறுத்தலால் உண்மையான ஆபத்தில் இருக்கின்றன. இந்தியர்கள் தங்கள் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் சீன வீரர்களை பார்த்து வருகின்றனர். சீன கம்யூனிஸ்டு கட்சி பல பத்தாண்டுகளாக நம்மை ஆதிக்கம் செலுத்த மேற்கு உலகம் அனுமதித்து இருக்கிறது. இதை அனைவரும் பார்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் நீண்ட காலமாக நாம் தூங்கிக்கொண்டு இருந்தோம் என்பதை குவாட் நாடுகளின் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவிலும் முந்தைய நிர்வாகம் சீனாவிடம் மண்டியிட்டு உள்ளது. எங்கள் அறிவுசார் சொத்துகளை சீனா அடிக்கடி களவாடி இருக்கிறது. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் அவர்களே எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். குவாட்டை சேர்ந்த பிற நாடுகளும் இதை சந்தித்து இருக்கிறார்கள்.

சீனாவின் அத்துமீறலை எதிர்க்கும் போராட்டத்தில் குவாட் உறுப்பு நாடுகளின் கூட்டாளியாகவும், பங்காளியாகவும் அமெரிக்காவும் நிச்சயம் இருக்க வேண்டும். அது இந்தியர்களாக இருந்தாலும் சரி தான், இமயமலையில் வடகிழக்கு பகுதியில் சீனாவுடன் நேருக்குநேர் மோதி வருகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக வடக்கு எல்லையில் சீனா பெருமளவில் படைகளை குவித்து வருகிறது. மொத்தத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சியால் அச்சுறுத்தல் என்பதை அனைத்து நாடுகளும் உணர்ந்திருக்கின்றன. உலகம் தற்போது விழித்திருக்கிறது மற்றும் அலை திரும்ப தொடங்கி இருக்கிறது. இந்த அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மைக் பாம்பியோ தெரிவித்தார்.


Tags : China ,border ,Secretary of State ,Ladakh ,India ,US , China massively concentrates on northern Ladakh border against India: US Secretary of State
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது