×

கொள்முதல் நிலையம் மூடல்: 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

* சம்பா சாகுபடி கேள்விக்குறி
* விவசாயிகள் கவலை

கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தது. சேதமடைந்த நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம், பனங்காட்டான்குடி, மாதிர வேலூர், குன்னம், புத்தூர் பழையபாளையம், அளக்குடி, ஆச்சாள்புரம், பச்சபெருமாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் குறுவை நெல் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன.

வருடம்தோறும் குறுவை நெல் கொள்முதல் அறுவடை ஆரம்ப காலத்தில் துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வழக்கம்போல வருடம்தோறும் செப்டம்பர் 28ம் தேதியுடன் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் செப்டம்பர் மாதம் 21ம் தேதியுடன் நெல் கொள்முதல் செய்வதை திடீரென நிறுத்தியதால் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச்சென்ற நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டு விவசாயிகளால் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அவ்வப்போது பெய்து வந்த மழையின் காரணமாக மாதிரவேலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் 10 ஆயிரம் நெல் மூட்டைகளும், ஆச்சாள்புரம் கொள்முதல் நிலையத்தில் சுமார் 5,000 நெல் மூட்டைகள் சேதம் அடைந்து விட்டன.

இந்நிலையில் மூடப்பட்ட அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மீண்டும் கடந்த 5ம் தேதி முதல் செயல்பட ஆரம்பித்தன. ஆனால் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளை சேதம் அடைந்ததாக கூறி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய மறுத்து விட்டனர். இதனால் விவசாயிகள் எடுத்துவந்த நெல் மூட்டைகளை சாலை ஓரங்களிலும் காய்ந்த இடங்களிலும் கொட்டி காய வைத்து வருகின்றனர். குறுவை சாகுபடிநெல் மூட்டைகளை விற்று கிடைக்கும் பணத்தை வைத்து சம்பா சாகுபடி செய்யலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் தற்பொழுது நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர்.

எனவே விவசாயிகள் நலன் கருதி சேதமடைந்த நெல் மூட்டைகளையும் கொள்முதல் நிலையங்கள் மூலம் உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டுமென்று அனைத்து விவசாயிகள் சார்பில் கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்கால் பாசனதாரர்கள் சங்கப் பொருளாளர் மீசை கலையரசன் நாகை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

Tags : Purchasing Station Closure: 50 thousand paddy bundles damaged by rain
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை