சென்னை: தமிழக பாஜ தலைவர் முருகன், அதிமுகவுடன் தான் கூட்டணி என்று கூறி வரும் நிலையில், அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘‘சட்டசபை தேர்தலில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி இருக்கலாம். அது அதிமுக அல்லது திமுகவாக கூட இருக்கலாம்’’ என கூறியிருந்தார். இது அதிமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் சென்னையில் முதல்வர் எடப்பாடியை எல்.முருகன் சந்தித்து பேசினார். இந்த நிலையில் எல்.முருகன் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.
அவர் டெல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் டெல்லியில் பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேச தான் வந்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஜெ.பி.நட்டாவை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. நேற்று பீகார் தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டார். இதனால், எல்.முருகன் ஜெ.பி.நட்டாவை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அல்லது நாளை அவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்கிறார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது குறித்து புகார் அளிப்பார் என்று கூறப்படுகிறது.