திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கண்ணூர் பானூர் மீத்தேல் பரம்பில் பகுதியை ேசர்ந்தவர் கே.எம்.ராஸிக். இவர் ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம் லெவன்’ விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்றுள்ளார். ஐபிஎல்.லில் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் 2 அணிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 வீரர்களின் மெய்நிகர் குழுவை தேர்ந்தெடுத்து ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டி விளையாடப்படுகிறது. இதில், நிஜ அணியின் வீரர்கள் அடித்த ரன்கள், விக்கெட்டுகள் மற்றும் பவுண்டரிகளின் அடிப்படையில், ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் போட்டியில் விளையாடுபவருக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை ஒட்டி, ராஸிக் ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டியில் வீரர்களை தேர்ந்தெடுத்து விளையாடினார். இதில் ராஸிக்கின் ‘ட்ரீம் லெவன்’ அணி 790.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் ‘ட்ரீம் லெவல்’ ஆன்-லைனில் போட்டியிட்ட 55 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை தாண்டி, ராஸிக் இந்த சாதனையை பெற்று வெற்றிக்கனியை பறித்துள்ளார். கண்ணூர் ஏகேஜி மருத்துவமனையில் ஸ்டேஷனரி கடை நடத்தி வரும் இவருக்கு ₹30 லட்சம் வரி போக, மீதமுள்ள ₹70 லட்சம் தொகை கிடைக்கும்.