துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 200வது வார்டுக்கு உட்பட்ட செம்மஞ்சேரி எழில்முகநகர், ஜவஹர் நகர் ஆகிய பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைவதால் மின் தடை ஏற்பட்டு இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், குறைந்தழுத்த மின் விநியோகம் காரணமாக வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மக்கள் புகார் அளித்தனர். இதனால், ஒரு வருடத்துக்கு முன்பு, அப்பகுதியில் வேறொரு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரிலிருந்து இங்குள்ள வீடுகளுக்கு உயரழுத்த மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இதன் காரணமாக அடிக்கடி, குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனையடுத்து மக்கள் மின்வாரிய அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் நள்ளிரவு 2 மணியளவில் சாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.