சென்னை: பழவேற்காடு ஏரியை ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும், என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மணல் திட்டு ஏற்பட்டு முகத்துவாரம் தூர்ந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மீனவர்கள் வங்கக்கடலில் சென்று மீன்பிடி தொழில் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி, நேர்கல் சுவர்கள் மூலம் நிலைப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் 2020-21ம் நிதியாண்டில் பழவேற்காடு ஏரியை ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி, ஆழப்படுத்தி நேர்கல் சுவர்கள் அமைத்து நிரந்தரமாக நிலைப்படுத்தப்படுத்த முடிவு செய்யப்பட்டது.இதற்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும். இப்பணி நிறைவேற்றப்படுவதால் பழவேற்காடு கிராம மீனவர்கள் ஆண்டு முழுவதும் எவ்வித சிரமமும் இன்றி கடலுக்குச் சென்று தொடர்ந்து மீன்பிடி தொழிலை மேற்கொள்ள இயலும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.