வாஷிங்டன்: ‘‘இந்தியாவின் வடக்கு எல்லையில் சீனா 60 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதுபோல், அண்டை நாடுகளை சீனா அச்சுறுத்துவது மிகவும் மோசமான செயல். இனிமேல் அது நடக்காது,’’ என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கூறி உள்ளார்.‘குவாட் குரூப்’ எனப்படும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் இந்திய-பசிபிக் மற்றும் தென் சீன கடல் பகுதியில் சீனாவின் அத்துமீறல் பற்றியும், சீனாவை ஒதுக்கி வைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை தனியாக சந்தித்து பேசினார்.
இந்நிலையில், அமெரிக்கா திரும்பிய பாம்பியோ, வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:நான்கு பெரிய ஜனநாயக, பொருளாதார நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தோம். இதில், அண்டை நாடுகளுக்கு சீனா ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல்கள் பற்றி விவாதித்தோம். சீன அச்சுறுத்தல் விவகாரத்தில் நாம் இத்தனை நாளும் தூங்கி விட்டோம் என்று உணர்வதாக 4 நாடுகளும் தெரிவித்துள்ளன.பல ஆண்டுகளாக மேற்கு நாடுகளும், சீனா ஆதிக்கம் செலுத்த அனுமதித்து விட்டன. முந்தைய அமெரிக்க அரசுகள், தனது அறிவுசார் சொத்துரிமையை திருட சீனாவை அனுமதித்துள்ளன. பல வேலைகளை அமெரிக்காவிடம் இருந்து சீனா பறித்துள்ளது. இது போன்ற விஷயங்கள் தங்கள் நாடுகளிலும் நடந்துள்ளதாக குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கூறினர்.
இந்தியாவின் வடக்கு எல்லையில் சீனா 60 ஆயிரம் படை வீரர்களை குவித்து அச்சுறுத்துகிறது. கொரோனா பரவலுக்கு சீனாதான் பொறுப்பு என்று ஆஸ்திரேலியா கூறியதால், அந்த நாட்டையும் அச்சுறுத்துகிறது. இதுபோல், சீனாவுக்கு எதிரான அச்சுறுத்தலில் ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை பெரிய அளவில் எதிர்நோக்குகின்றன. அண்டை நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் செயல், மிகவும் மோசமான ஒரு நடத்தை. இத்தனை ஆண்டுகளாக சீனாவை திருப்திப்படுத்த முயற்சி செய்ததினால்தான் அதன் மோசமான நடத்தை அதிகரித்துள்ளது. ஆனால், இனி அது நடக்காது. அவர்கள் இதற்கு விலை கொடுத்தாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அமெரிக்க போர்க்கப்பல் எங்கே? விமானங்கள் மூலம் தேடும் சீனா
தனக்கு சொந்தமான தென் சீன கடல் பகுதிக்குள் அமெரிக்காவின் ஏவுகணைகளை வீழ்த்தும், ‘ஜான் எஸ் மெக்கெய்ன்’ போர்க்கப்பல் அத்துமீறி கடந்து சென்றிருப்பதாக சீனா குற்றச்சாட்டு கூறி உள்ளது. பார்சல் தீவுப்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் கடந்துள்ளதாக சீன ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. இது, சீன இறையாண்மையை மிகத் தீவிரமாக அத்துமீறும் செயல் என கூறியுள்ள சீன ராணுவ செய்தி தொடர்பாளர் ஜியாங் நான்டோங்க், பதற்றத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அமெரிக்க போர் கப்பலை கண்காணிக்க தென் சீன கடல் பகுதியில் தனது போர் விமானங்களையும் கப்பல்களையும் சீனா அனுப்பி தேடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.