சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய, போக்சோ சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி சிறுமி, சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை இந்த சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்படுபவர்களை, மகளிர் நீதிமன்றம் விசாரித்து தண்டனை வழங்கி வந்தது.இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி கடந்த ஆண்டு முதல் போக்சோ வழக்குகளுக்கு மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டது. அதற்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பொதுவாக, ஒருவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டால், அந்த காவல் நிலையத்தின் எல்லையான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள்.
இதே நடைமுறையை தான் போக்சோ வழக்கில் போலீசார் செய்து வந்தனர். சென்னையை பொறுத்தவரை எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி வந்தனர்.இந்நிலையில், இனி ரிமாண்ட் செய்ய வேண்டாம், சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பும்படி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் போக்சோ நீதிமன்ற நீதிபதி, எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட்டிடம் கேட்டுக்கொண்டார்.அதன்படி மாஜிஸ்திரேட் தனது உத்தரவில், இனி போக்சோ வழக்குகளில் வரும் குற்றவாளிகளை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடக்கூடாது. போலீசார் அழைத்து வந்தாலும், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.