×

மத்திய ரிசர்வ் காவல்படை தேர்வு தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை: உள்துறை அமைச்சர், சிஆர்பிஎப் இயக்குனருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்

சென்னை: மத்திய ரிசர்வ் காவல்படை தேர்வுக்கு தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என்று உள்துறை அமைச்சர் மற்றும் சி.ஆர்.பி.எப்  இயக்குனருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:மத்திய ரிசர்வ் காவல் படை 24 துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனத் தேர்வு முறைமைக்கான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது  குரூப் “பி” மற்றும் குரூப் “சி” அமைச்சுப் பணி அல்லாத பதிவிதழில் இடம் பெறாத, மோதல் முனைகளில் பணிபுரிகிற அகில இந்திய  பணிகளுக்கானவை ஆகும். விண்ணப்பத்திற்கான கடைசி நாளாக அக்டோபர் 31ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்த காலியிடங்கள் 780ஐ விட  அதிகம். எழுத்து தேர்வு வரும் டிசம்பர் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கையில் தேர்வு மையங்கள் 9 இடங்களில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும்,  நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா ஒரு இடமும் அமைந்துள்ளன. வட மாநிலங்களில் 5 மையங்கள் அமைந்திருப்பதில் தவறில்லை.  ஆனால் சமத்துவ அணுகுமுறை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இல்லை என்பதே பிரச்னை. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம்  கூட இல்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.இத்தகைய சமத்துவமற்ற பங்களிப்பு, தமிழக, புதுச்சேரி விண்ணப்பதாரர்களை மிகப்பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கும். அதிலும் குறிப்பாக இன்றைய  கோவிட் 19 சூழல், மக்களின் நகர்வுகளுக்கு இருக்கிற பிரச்னைகள் ஆகிய பின்புலத்தில் மேற்கண்ட பணிகளுக்கான போட்டியில் ஈடுபடுவதற்கான  தடைகளாக மாறக் கூடாது. ஆகவே, தேர்வு மையங்களை அதிகரித்து இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கான சம பகிர்வை உறுதி செய்ய  வேண்டுகிறேன்.

தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்தபட்சம் 1 மையத்தை இந்த இரு பகுதிகளிலும் அறிவிக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்.தற்போது விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் மறு அறிவிக்கை வெளியிட்டு, மாற்றங்களின் காரணமாக, அதன்  தேதியிலிருந்து கூடுதல் ஒரு மாத அவகாசம் வழங்கி புதிய விண்ணப்பங்களையும் வரவேற்க வேண்டும். இப்பிரச்னையின் நியாயத்தை ஏற்று  சாதகமான முடிவை விரைவில் எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



Tags : Central Reserve Police Examination ,Home Minister ,examination center ,CRPF ,Tamil Nadu: Letter from S. Venkatesh , Selection of the Federal Reserve Police There is not even an examination center in Tamil Nadu: Home Minister, CRPF S. Venkatesh MP letter to the director
× RELATED மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து