குளச்சல்: குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் ஒரு பிரபல ஜவுளி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் பெங்களூரில் உள்ள ஜவுளி கடைக்கு மாற்றப்பட்டார். அங்கு பிரகாஷ்நகரை சேர்ந்த கவிதா (25) என்பவரும் வேலை செய்து வந்தார்.
ஒரே நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்த்ததால் தினேஷ் - கவிதா இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. விடுமுறை நாளில் காதல் ஜோடி உல்லாசமாக ஊர் சுற்றி வந்தது. இவர்களின் காதல் இருவரது பெற்றோர்க்கும் தெரிய வர, காதலுக்கு 2 வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தினேஷ் கடந்த மாதம் தனியாக வெள்ளிச்சந்தை ஊருக்கு திரும்பினார். ஊர் திரும்பிய தினேசுக்கு வீட்டினர் அவசரஅவசரமாக கருங்கல் பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண்ணை திருமணத்திற்கு பேசி முடித்தனர். வரும் 26ம் தேதி உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு அழைப்பிதழ்களும் விநியோகம் செய்திருந்தனர்.
இதனை அறிந்த கவிதா, தினேஷை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் தினேஷ் கவிதாவின் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் உயிருக்கு உயிராய் காதலித்த தினேஷ் தன்னை கை விட்டுவிடுவாரோ? என கவிதா கலங்கினார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கவிதா பெங்களூரிலிருந்து தனியாக புறப்பட்டு தினேசை பார்க்க குமரி மாவட்டம் வந்தார். வெள்ளிச்சந்தை செல்லும் பஸ் தடம் எண் கேட்பதற்கு தினேசுக்கு போன் செய்தார். அப்போதும் தினேஷ் கவிதாவின் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை.
இதையடுத்து கவிதா குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். கவிதாவிடம் விசாரணை நடத்திய சப் - இன்ஸ்பெக்டர் அனிதா இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். ஆனால் கவிதாவின் பெற்றோர் அவரை அழைத்து செல்ல விருப்பம் இல்லை என தெரிவித்தனர். மாலையில் தினேஷின் பெற்றோர் குளச்சல் மகளிர் காவல் நிலையம் வந்தனர். உடன் தினேசும் வந்தார். அப்போது கவிதாவை பார்த்த தினேஷ் கண்ணீர் வடித்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஊருக்கு வந்த எனக்கு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் என கூறினார்.
பின்னர் போலீசார் தினேஷின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உறவுக்கார பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்துவது எனவும், நாளை (இன்று) ஊர் கோயிலில் வைத்து தினேஷ் - கவிதா திருமணத்தை நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு தினேஷின் பெற்றோர் கவிதாவை தங்கள் வீட்டு மருமகளாக வெள்ளிச்சந்தைக்கு அழைத்து சென்றனர்.