×

பெரம்பலூரில் உயிருடன் இருக்கும் பெண் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!: குடும்ப தகராறால் விபரீதம்..!!

பெரம்பலூர்: பெரம்பலூரில் உயிருடன் இருக்கும் பெண் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மேட்டுத்தெருவில் வசிப்பவர் செல்வராஜ். இவது மகள் ரோஷினி(24). இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கொட்டகையை சேர்ந்த ரெங்கராஜ் மகன் வீரராகவனுக்கும் கடந்த 2018ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரோஷினிக்கு 50 பவுன் நகை அணிவித்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த மார்ச் 7ம் தேதி, வீரராகவன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ரோஷினி தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். ரோஷினிக்கு அணிவித்த 50 பவுனில், 7 பவுன் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளனர்.

இதனால் இரு குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி ரோஷினி வசிக்கும் எளம்பலூர் ரோடு, மேட்டுத்தெரு பகுதிகளில் ரோஷினி இறந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதைப்பார்த்த ரோஷினி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ரோஷினியின் தந்தை செல்வராஜ், பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். அதில், ரெங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் தான், உயிருடன் இருக்கும் ரோஷினி இறந்து விட்டதாக போஸ்டர் ஒட்டியிருக்கலாம். இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிருடன் இருக்கும் பெண் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம், பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Perambalur , Perambalur, Surviving Woman, Tear Tribute Poster
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி