×

6 மாத காலத்துக்கு வங்கிகள் வட்டி விதித்த விவகாரம் :கூடுதல் சலுகைகளை வழங்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

புதுடெல்லி, கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத  காலத்துக்கு வங்கிகள் வட்டி விதித்த விவகாரத்தில் கூடுதல் சலுகைகள் வழங்க முடியாது என்று, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டன. அதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன; பல லட்சம் பேர்  வேலையிழந்தனர். அதைக் கருத்தில் கொண்டு தனிநபர்கள், நிறுவனங்கள் பெற்ற  கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதற்கு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் கடந்த  ஆக. 31ம் தேதி வரை 6 மாதங்களுக்கு கால அவகாசம் அளிப்பதாக இந்திய ரிசர்வ்  வங்கி (ஆர்பிஐ) அறிவித்தது.

ஆனால், கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத  காலத்துக்கு வங்கிகள் வட்டி விதித்தன. இதனால் அதிருப்தியடைந்த சிலர், வங்கிகளின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த  விவகாரத்தில் நிறுவனங்கள் சிலவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.  அந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி,  எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அடுத்த  உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எந்தவொரு கடனையும் வங்கிகள் வாராக் கடனாக  அறிவிக்கக் கூடாது என்று கடந்த மாதம் 10ம் தேதி உச்சநீதிமன்றம்  இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் இல்லை. குறிப்பாக, வீட்டுக் கடன்,  தனிநபர் கடன், கல்விக் கடன், வாகனக் கடனுக்கான தவணைக்கு வட்டிக்கு வட்டி இல்லை. சிறு, குறு, தொழில் கடன்,  கிரெடிட் கார்டில் கடன் பெற்றவர்களுக்கான கடன் தொகையில் வட்டிக்கு வட்டி வசூல் இல்லை. மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களில் கடன் தவணையை முறையாக செலுத்தியவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் அமர்வு, ‘மத்திய அரசு, ஆர்பிஐ தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் முழுமையான விபரங்கள் இல்லை. அதனால், புதியதாக மற்றொரு பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு, ஆர்பிஐ தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறியது. அதனை தொடர்ந்து இன்று மத்திய அரசு மற்றும் ஆர்பிஐ சார்பில் புதியதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘காமத் குழுவின் பிரந்துரைகள் அடங்கிய தொகுக்கப்பட்ட பிரமாண பத்திரம் தற்போது தாக்கல் செய்யப்படுகிறது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மாற்றமில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகளில் மாற்றமில்லை.

அதனால், கூடுதல் சலுகைகளை வழங்க முடியாது. அவ்வாறு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டால், பொருளாதார சிக்கல்கள் ஏற்படும். வங்கிகள் பாதிக்கும். கடன் திருப்பி செலுத்தாதவர் பட்டியலில் கடந்த 6 மாதமாக கடனை திருப்பதி செலுத்தாதவர்களின் பெயரை ேசர்க்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடையை நீக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 2 ஆண்டுகள் வரை நீடிக்க முடியும். எந்தவொரு கடனையும் வங்கிகள் வாராக் கடனாக  அறிவிக்கக் கூடாது என்ற இடைக்கால தடையை நீக்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.


Tags : Banks ,Supreme Court ,Federal Government ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...