×

வரும் சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

சென்னை,:வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடியாக இருக்கும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:மதிமுக சரியான பாதையில் திட்டமிட்டு, இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கிலும், திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில்  செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின்போது நாங்கள் கூறியது ேபால், தமிழகத்தை சனாதன சக்திகள் ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளன. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஊட்டிவளர்த்த சமூகநீதியை தகர்க்க முயற்சிக்கின்றன. இதை தடுக்க வேண்டியது மதிமுகவின் கடமை. வருகிற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் என்பதற்கு எந்தவித மாறுபட்ட கருத்து இல்லை. இதை திடீரென்று இன்றைக்கு நான் சொல்லவில்லை.  கட்சியில் எடுத்த முடிவை செயல்படுத்தும் நாளில் இருந்து சொல்லி வருகிறோம். எங்களது கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு இல்லை.

தமிழகம் ஊழல் மயமாகி வருகிறது. தமிழகத்தில் உரிமை காவு கொடுக்கப்பட்டு விட்டன. வேளாண் சட்டங்களை கொண்டு வந்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, 3 மசோதாக்களையும் சட்டங்களாக்கி விவசாயிகளின் தலையில் பாறாங்கல்லை போட்டு விட்ட மத்திய அரசை எதிர்த்து களம் காண்கிறோம். மக்கள் மன்றத்திலும் போராடுகிறோம். நீதிமன்றத்திலும் போராடுகிறோம். திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 10 மாநில முதல்வர்கள் இச்சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க திமுக ஊக்குவித்து வருகிறது. திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றுபட்ட சிந்தனையோடு தொடர்ந்து செயல்படுகிறோம். வருகிற தேர்தல் அதிமுகவுக்கு மரண அடியாக இருக்கும். அவர்களுக்குள் மனக்கசப்பு மறந்து விட்டோம் என்றும், கைகோர்த்து கொண்டோம் என்றும் அவர்களுக்குள் சொல்லிக்கொள்ளலாம். மக்கள் மன்றத்தில் அவர்களுக்கு இடமில்லை. மதிமுக தனித்தன்மையுடன் தான் போட்டியிடும். தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். நான் பதவிகளுக்காக வாழவில்லை. லட்சியங்களுக்காக வாழ்கிறேன். வேறுவிதமான அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் கற்பனையானவை, அதில், துளியளவும் உண்மை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DMK ,government ,Vaiko ,assembly elections ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்