×

திருவாரூர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பொறியாளர் அலுவலகத்தில் தமிழ் புறக்கணிப்பு

*சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பால் இந்தி, ஆங்கில எழுத்து அழிப்பு

திருவாரூர் : திருவாரூர் ரயில் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பொறியாளர் அலுவலகத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பலகையில் எழுதப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பால் அளிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்பது போல, ஒரே மொழி என்று இந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி திணிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி தமிழகத்தில் இருந்து வரும் தேசிய வங்கிகள், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் மாநில மொழியான தமிழ்மொழியை இருட்டடிப்பு செய்து இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவாரூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் பழமை வாய்ந்த ரயில் நிலைய வளாகத்தில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள முதல்நிலை பொறியாளர் அலுவலக கட்டிடத்தின் பெயர் பலகையில் தமிழ்மொழி இருட்டடிப்பு செய்யப்பட்டு இந்தி மற்றும் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நேற்றுமுன்தினம் இரவு இந்த பெயர் பலகை முழுவதும் முற்றிலுமாக சுண்ணாம்பு கொண்டு அழிக்கப்பட்டது.

இதுகுறித்து அலுவலகத்தின் உதவி கோட்ட பொறியாளரிடம் கேட்டபோது, பெயிண்டர் வசதி இல்லை என்பதால் வேறு இடத்திலிருந்து பெயிண்டர் வரவழைத்து பெயர்பலகை எழுதப்பட்டது. அவ்வாறு எழுதும்போது இடம் இல்லாத காரணத்தினால் தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. தமிழ்மொழி இல்லாதது குறித்து புகார் எழுந்ததன் காரணமாக முற்றிலுமாக இந்த பெயர் பலகை தற்போது அழிக்கப்பட்டு மீண்டும் புதிதாக மூன்று மொழிகளிலும் பெயர்ப்பலகை எழுதப்படும் என்றார்.


Tags : office ,engineer ,railway station premises ,Thiruvarur , Thiruvarur, Hindi, Tamil,Tamil boycott
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...