மதுராந்தகம்: தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் முனுசாமி மதுராந்தகம் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம் நகராட்சியில் இருந்து சூனாம்பேடு சாலையில் கடப்பேரி பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் மூலம் சித்தாமூர், சூனாம்பேடு, செய்யூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம். இந்தமேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன.
இந்த மேம்பாலத்தின் இருபுறங்களிலும் 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பல தருணங்களில் ஒன்றிரண்டு மின் விளக்குகளே எரிகின்றன. மற்றவை பழுதாகிவிட்டன. இதனால் அந்த மேம்பால பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துகிடக்கிறது.இதனால் அந்தவழியாக பயணம் செய்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பலர் பாதிப்படைந்துள்ளனர். எனவே மேம்பாலம் முழுவதும் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைவைக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் நாராயணனிடம் கேட்டபோது, மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் அனைத்து கம்பங்களிலும் மின்விளக்குகள் பொருத்தப்படும் என உறுதியளித்தார்.