திருவெறும்பூர்: திருச்சியை அடுத்த நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் பெண் காவலர் பயிற்சி பள்ளி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருநங்கையான புதுக்கோட்டையை சேர்ந்த சம்யுத்தா (25) காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகிறார். இந்த பயிற்சி கல்லூரியின் முதல்வராக உள்ள முத்துக்கருப்பன், துணை முதல்வர் மனோகரன் ஆகியோர் சம்யுத்தாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக சம்யுத்தா, காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜி சத்யபிரியாவிடம் தொலைபேசியில் புகார் செய்ததாகவும், டிஐஜி உத்தரவின்பேரில் தூத்துக்குடி எஸ்.பி ராமகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் திருச்சி வந்து சம்யுத்தா,பெரியகருப்பன், மனோகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த பயிற்சி பள்ளி சப்இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் காவலர் ஒருவர், இதற்கெல்லாம் காரணம் நீதான் என சம்யுத்தாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்யுக்தா விரக்தியில் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று காலை அறையில் இருந்த சம்யுத்தா, டிஞ்சர் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த சக காவலர்கள், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் உள்ள சம்யுத்தாவிடம் கேட்டபோது, நான் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கு வேறு எதுவும் காரணமல்ல என்றார். எனினும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.