திருவள்ளூர்: வேப்பம்பட்டு பகுதியில் மதுபான பார்களில் கள்ளத்தனமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி.அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வேப்பம்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டார்.அப்போது, மதுபான கடை பாரின் உரிமையாளர் தாணு அவரது மகன் விக்கி (எ) விக்னேஷ் ஆகியோர் தங்களது சுய லாபத்திற்காக கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தனர்.
இந்நிலையில், அவர்களை தடுத்து நிறுத்த சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் முயற்சித்தபோது, தாணுவும், அவரது மகன் விக்னேஷூம் அசிங்கமாக பேசி கத்தி மற்றும் உருட்டுக் கட்டையால் அவரை தாக்கினர். இதில் அவர் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார். இதனையடுத்து, தாணுவும், விக்னேஷூம் அங்கிருந்து தப்பினர். அங்கிருந்த மது பாட்டில்களை சோதனை செய்தபோது அது விஷ நெடியுடன் வாசம் வந்தது. போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தப்பியோடிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.