சென்னை: உத்தரபிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, விசிக சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்தரபிரதேசத்தில் 19 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒருபகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், விசிக மாநில பொருளாளர் முகமது யூசுப் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டு மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தின் போது முகமது யூசுப் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உத்தரபிரதேசத்தில் நடந்த இச்சம்பவம் நாட்டிற்கே அவமானம். நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில் தான் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது. எனவே, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை இந்திய அளவில் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.