ஹத்ராஸ்: பாலியல் பலாத்காரத்தால் உயிர் இழந்த ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்துக்கு மிகப்பெரிய விஐபி.க்கு அளிப்பது போன்ற பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டம், புல்கார்கி பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண், கடந்த மாதம் 14ம் தேதி 4 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார். அவர், கடந்த மாதம் 29ம் தேதி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், அப்பெண்ணின் சாவுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. அப்பெண்ணின் குடும்பத்தை சந்தித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இளம்பெண்ணின் பலாத்காரம் தொடர்பாக உயர் பிரிவை சேர்ந்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை காப்பாற்ற, அவர்களின் பிரிவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் களமிறங்கி உள்ளனர். இளம்பெண்ணை அவர்களின் குடும்பத்தினரே அடித்து கொன்று விட்டதாகவும், கைது செய்யப்பட்ட 4 பேரும் அப்பாவிகள் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனால், , இளம்பெண்ணின் குடும்பத்துக்கு உத்தர பிரதேச அரசு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது.
* இளம்பெண்ணின் வீட்டைச் சுற்றி 60 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிராமத்தின் நுழைவு வாயிலில் அதிவிரைவுப் படை போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
* வீட்டைச் சுற்றி 8 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
* வீட்டு வாசலில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டு. பார்வையாளர்கள் சோதனை செய்யப்படுகின்றனர்.
* இளம்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 போலீசார் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
* வீட்டின் அருகே தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
* இந்த பாதுகாப்பைடிஐஜி ஒருவர் கண்காணிக்கிறார்.