×

தோகைமலை பகுதியில் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை : தோகைமலை பகுதியில் கோழிக்கொண்டை பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் கோழிக்கொண்டை பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தோகைமலை பகுதிகளில் கடந்தசில வருடங்களாக மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, இட்லி பூ என்ற விச்சிப் பூ போன்ற பல்வேறு மலர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதே போன்று கோழிக்கொண்டை பூ சாகுபடியிலும் தற்போது விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோழிக்கொண்டை நடவு செய்த 2 மாதங்களுக்கு பிறகு பூ பூக்க தொடங்குவதாகவும், அதன் பின்னர் 3 முதல் 4 மாதங்கள் வரை தினமும் பூக்களை பறிக்கலாம் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்றும், கோழிக்கொண்டை பூ செடிகளுக்கு எந்த மருந்துகளும் தெளிக்க வேண்டியதில்லை என்றும் சாகுபடிக்கான செலவினங்கள் மிக குறைவு என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

தினமும் பறிக்கப்படும் கோழிக்கொண்டை பூக்கள் திருச்சி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். அங்கு சீசன் இல்லாதபோது ஒரு கிலோ கோழிக்கொண்டை பூக்கள் ரூ.20க்கும், சீசன் உள்ளபோது 60 ரூபாய்வரை விற்பனை நடைபெறும். இதனால் அன்றாட செலவிற்கு பணம் கிடைப்பதாலும், சாகுபடிக்கு அதிக செலவு இல்லை என்பதாலும் தற்போது கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

Tags : area ,Tokaimalai , Tokaimalai: Farmers in Tokaimalai area are showing interest in Kozhikode flower cultivation.
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு